பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 7 மற்றும் 6 ஆக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
170 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூ, டோங்கலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன.
இந்த இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. பலாரோவா மற்றும் பெடோபோ கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேரைக் காணவில்லை என்று அந்த கிராமங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவாகியது இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.