புதுதில்லி: ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரம் தாழ்ந்து பேசுகிறார் என்றும் அவர் கூறும் தகவல்கள் அனைத்து தவறானது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் ‘‘இந்திய பாதுகாப்பு படைகள் மீது, பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து, ரூ.1.3 லட்சம் கோடி செலவில் துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளனா். நாட்டுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களை மோடி அவமதித்து விட்டார். நாட்டின் ஆன்மாவுக்கு அவா் துரோகம் இழைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ராகுல் பேச்சு குறித்து மறுப்பு தெரிவித்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஃபேல் ஒப்பந்தம் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தான் போடப்பட்டது. ஊழலின் ஊற்றாக விளங்கிய காங்கிரஸ் ஆட்சியில் காலம் தாழ்த்தப்பட்டது.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த ஒப்பந்தத்தை திருத்தி 9 சதவீதம் குறைவான தொகைக்கு ரஃபேல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 36 ஜெட் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்பதால் ஒப்பந்தம் விரைவுபடுத்தப்பட்டது. நமது படையினரின் பலத்திற்காகவே இந்த விமானங்கள் வாங்கிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து முன்பு நாடாளுமன்றத்தில் பொய் பேசிய ராகுல், தற்போது வெளியிலும் அப்பட்டமாகவும், தரம் தாழ்ந்த பொய்களையும், தவறான தகவலை பரப்பு வருகிறார்.
ரஃபேல் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம். ஆனால், சீனா, பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக ராகுல் பேசி வருகிறார். ராகுல் நாட்டின் நலனை புறந்தள்ளிவிட்டு, சுயநலத்திற்கும், காங்கிரஸ் கட்சியின் ஆதாயத்திற்காக பொறுப்பற்ற தன்மையில் ராகுல் பேசி வருகிறார் என கூறினார்.