புதுதில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ரூ.54 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை அமலாக்கத்துறை வியாழக்கிழமை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தொழிலதிபர்கள் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அந்நிறுவனம் தப்பிக்க கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
அதன்படி, கொடைக்கானலில் உள்ள ரூ.3.75 கோடி மதிப்புள்ள 2 காட்டேஜ்கள், ரூ.25 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலங்கள், தில்லியில் உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் நிலம், இங்கிலாந்தில் உள்ள 8.67 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, ஸ்பெயின் கவாவில் உள்ள 14 கோடி ரூபாய் மதிப்புள்ள டென்னிஸ் கிளப் மற்றும் நிலமும் முடக்கப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்தின் பெயரில் உள்ள ரூ.9.23 கோடி மதிப்புள்ள வங்கி டெபாசிட் மற்றும் அவரது நிறுவனத்தின் பெயரில் போட்டப்பட்டுள்ள ரூ.90 லட்சம் மதிப்பிலான டெபாசிட் தொகைகளும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று இந்த வழக்கில் தொடர்புடைய பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.