குருகிராம்: அரியானாவில் நீதிபதியின் மனைவி, மகன் மீது இன்று துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அரியானாவில் உள்ள குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் உள்ளது. இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த மார்க்கெட்டில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனும் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கியால் சுட்ட பின் படுகாயமடைந்த நீதிபதியின் மகனை தூக்கி அந்த காவலர் காரில் ஏற்ற முயற்சிப்பதும், ஏற்ற முடியாததால் காரை ஓட்டிக் கொண்டு செல்வதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சதார் போலீஸார் தப்பியோட முயன்ற மகிபாலை மடக்கிப் பிடித்து கைது செய்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் காரணமாக பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.