சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு வரவே வராது என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை, போதிய அளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளது.
தமிழகத்தில் மின்வெட்டு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. மின்சாரம் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். தமிழக மின்துறையை தனியார் மயமாக்கப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றார்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், மேட்டூர், வடசென்னையில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. 12 வேகன்கள் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளது என்ற இலக்கு விரைவில் எட்டப்படும்.
முதல்வராக இருந்தவரின் மகன் முதல்வராக முடியவில்லை என்ற ஆதங்கம் ஸ்டாலினுக்கு உள்ளது. ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என தங்கமணி தெரிவித்தார்.