வாரணாசி: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த மக்களவை தொகுதியான வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி தனது 68ஆவது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாடினார்.
இதையொட்டி, வாராணசியில் உள்ள நரூர் கிராமத்துக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை பிற்பகல் வந்தார். பள்ளிகளில் கூடியிருந்த குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்து மற்றும் இனிப்புகளுடன் வரவேற்றனர். அங்கு அவர், தன்னார்வ தொண்டு அமைப்பால் நடத்தப்படும் ஆரம்ப பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின்னர், காசி வித்யாபீட மாணவர்களுடன் பிரதமர் உரையாடினார். இளைஞர்கள் விளையாட்டுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர், காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். இவ்வழிபாட்டில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.
வாரணாசிக்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று ரூ.500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிறைவடைந்த சில திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் வாரணாசியின் புறநகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.