சென்னை: தமிழக அரசு போக்குவரத்துத் துறைக்கு புதிதாக வாங்கப்பட்டு அண்மையில் பயன்பாட்டுக்கு விடப்பட்ட பேருந்துகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஹிந்தி மொழி வாசகங்கள் வலிந்து திணித்திருப்பது கண்டனத்திற்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் புதிய பேருந்துகளில் அவசர வழி, இருப்பிடங்கள் உள்ளிட்ட குறிப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்ற வேளையில், ஹிந்திக்கு ஏற்றம் தரும் வகையில் அரசு செயல்படுவது ஏற்கவே முடியாத நடவடிக்கையாகும். அரசு பேருந்துகளில் தமிழையே புறக்கணிக்கும் அளவுக்கு எப்படி துணிச்சல் வந்தது? பேருந்துகளில் ஹிந்தி மொழியை தமிழக அரசு வலிந்து திணித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது எனத் தெரிவித்துள்ளார்.