மாநில அரசின் அனுமதியின்றி மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
இன்று சட்டப்பேரவையில் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழகத்தில் 7 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரே கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இதே கூட்டத்தொடரில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம். அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கூறினார்.
இதற்கு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசக்கூடாது என மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், திட்டத்தை சட்டரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது, அப்படி இருக்கும்போது எதற்காக போராட்டம் நடத்த வேண்டும். தானாக வந்து சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம்.
மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.