வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன் மக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும், இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதிகொள்வோம் என பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், வணக்கம். நான் உங்கள் வேலுமணி பேசுகிறேன். மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றியும் அதனால் நமக்கு மட்டுமின்றி, நம் அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்கள் பற்றியும் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் பெய்த மழையில், எத்தனை சதவீத நீரை நாம் சேமித்துவைத்திருக்கிறோம்? அரசு தொடர்ந்து தன் கடைமையை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மழை நீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதையில் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், மழை நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதை கருத்தில் கொண்டு, தமிழக மக்கள் அனைவரையும் வட கிழக்கு பருவ மழைக்கு முன், மழை நீரை சேமிக்கும் மகத்தான பணியில் ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோம்.
நமக்காக நாட்டுக்காக நாளைக்காக!