சென்னை: சுகாதாரத்தில் தமிழகம் 9-ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் தவறானது என்றும் முரண்டாடுகள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ‘தாய்’ திட்டம் எனப்படும் அவசரகால விபத்து சிகிச்சைப் பிரிவில் அவசர சிகிச்சை செயல்மாதிரி ஆய்வகம் மற்றும் ‘தாய்’ திட்ட மண்டல பயிற்சி மைய திறப்பு விழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இதைத் திறந்து வைத்த அமைச்சா் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் ‘தாய்’ திட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்பட 80 மருத்துவமனைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார தரவரிசைப் பட்டியலில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
கடந்த ஆண்டு 3-ஆம் இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 9-ஆம் இடத்தில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 99 சதவீத பிரசவங்கள், மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. அதில் 70 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. ஆனால், நிதி ஆயோக் தரவுகளில் 80 சதவீத பிரசவங்கள் மட்டுமே மருத்துவமனைகளில் நடைபெறுவதாகவும், 20 சதவீத பிரசவங்கள் வீட்டில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி விவகாரத்திலும், முரண்பட்ட தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சுட்டிக்காட்டி, தமிழக தலைமைச் செயலா் மற்றும் சுகாதாரத் துறை செயலர் ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு நானும் கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.