கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு சோதனை: ரூ.31.80 லட்சம் பறிமுதல்
கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் இரண்டு நாட்களாக நடத்தி வரும் சோதனையில் ரூ.31.80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரோடு - பவானி சாலை, அசோகபுரத்தில் உள்ள கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் முதலில் கணக்கில் வராத ரூ. 18.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பின்னர் மேலும் 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது.
இதுபோல் ஈரோட்டில் மேலும் 2 கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையிலையில், கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் இரண்டு நாட்களாக நடத்தி வரும் சோதனையில் இதுவரை கணக்கில் வராத ரூ.31.80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.