சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் சென்னை வந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்காக, சீன அதிபருடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, தேசிய வளர்ச்சி, சீரமைப்புத்துறை அமைச்சர் ஹி லைபெங் வருகை தந்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்கு தமிழக அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சீன அதிபரை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.
அதன் பிறகு விமான நிலைய பகுதியில் மேளதாள வாத்தியங்கள் முழங்க வழங்கப்பட்ட கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சி கண்டு ரசித்தார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் கிண்டி ஐ.டி.சி சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு செல்கிறார்.
சீன அதிபரின் வருகையொட்டி, 10 மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சுமார் 15 ஆயிரம் போலீஸார் மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் கடலோர பகுதியில் 6 கடற்படை கப்பல்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இவை தவிர 6 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை நகரமும், மாமல்லபுரமும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.