தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள பிகில் படத்தின் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே, சிறப்பு காட்சிக்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். பின்னர் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது: சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதித்த கட்டணத்தையே வாங்கவேண்டும் என்ற நிபந்தனையை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது என கூறினார்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம்.
இந்த அனுமதி அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள படங்களுக்கும் பொருந்தும்.