கராச்சி: கராச்சி-ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்காம் விரைவு ரயில் நிகழ்ந்த தீ விபத்தில் இறப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி இடையே தேஸ்காம் விரைவு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று காலை ரஹீம் யார்கான் அருகே லியாகத்பூரில் சென்றுகொண்டிருந்தபோது ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மலமவென அருகில் உள்ள பெட்டிக்கும் பரவியது.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் தீயை கட்டுப்படுத்தி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.