தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
குமரி முனை, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, இப்போது மாலத்தீவு, குமரி முனை பகுதியில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மாலத்தீவின் கிழக்கு வடகிழக்கில் 390 கி.மீ. தொலைவிலும், லட்சத்தீவின் கிழக்கு தென்கிழக்கில் 390 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்துடன் நேரடி தொடா்பில் இருந்து நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி முனை, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இது மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2-ஆவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.