மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் இருந்து அமைதிப்பேரணி தொடங்கியது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது.
அதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 8 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய அமைதிப்பேரணி மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி சென்றடைந்தது. நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அமைதிப்பேரணியில் திமுக பொருளாளர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராஜா, ஆர்.எஸ்.பாராதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
அங்கு அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதுவதுபோல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.
அதன் பின், மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்கிறார். முரசொலி செல்வம் வரவேற்கிறார். மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.