பூடானின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் எனவும், இதில் இந்தியா பெருமை கொள்கிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, பூடான் நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாகத் திகழும் பூடானுக்கு பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) சென்றார். பிரதமர் அந்நாட்டுக்குச் செல்வது இது இரண்டாவது முறை.
அண்டை நாடுகளிடம் நல்லுறைவைப் பேணுவதே பிரதான கொள்கையாக கொண்டு செயல்படுவதன் தொடர்ச்சியாகவே சுற்றுப் பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லோடாய் ஷெரிங், மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியால் வாங்சக் ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் மோடி கூறுகையில், இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பூடான் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. பூடான் போன்ற அண்டை நாடுகளுடனான நட்பை எந்த நாடு வேண்டாம் என சொல்லாது. 130 கோடி இந்தியர்களின் இதயத்தில் சிறப்பிடத்தை பூடான் பெற்றுள்ளது.
பூடான் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியையும் இந்தியா செய்யும். நீர்மின் திட்டம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு ரூபே கார்டை அறிமுகம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பூடானின் ஐந்தாண்டு திட்டத்தில், இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என மோடி கூறினார்.
பிரதமர் மோடி, அங்கு மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.
அண்டை நாடுகளின் உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்குத் தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டதும், அப்போதிலிருந்தே இந்தியா மற்றும் பூடானுக்கு இடையிலான இருரதப்பு உறவு சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டு வருவது நினைவுகூறத்தக்கது.