கைது செய்யப்படுவதில் எனக்கு பயமில்லை: இன்னும் 3, 4 நாட்களில் சரணடைவேன் என்று வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்ததாக தேடப்பட்டு வரும் பிகார் சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங் வீடியோ பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம், மோகாமா தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங், அவரது மூதாதையரின் லட்மா கிராமத்தில் உள்ள வீட்டில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து ஆகஸ்ட் 16-ஆம் தேதி போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது 26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குத் சென்றபோது அவர் அங்கிருந்து காணாமல் போனார்.
இந்நிலையில், அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 14 ஆண்டுகளாக எனது மூதாதையர் வீட்டுக்கு செல்வதில்லை. அதனால் நான் அங்கு ஏ.கே.47 துப்பாக்கி, வெடிகுண்டுகள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தேன் என்ற கேள்விக்கே இடமில்லை.
கைது செய்யப்படுவதில் எனக்கு பயமில்லை. இன்னும் 3, 4 நாட்களின் நான் சரண்டர் ஆவேன் என்றும், தனக்கு எதிராக கூடுதல் போலீஸ் எஸ்.பி லிபி சிங் சதி செய்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.