சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அரசுப் பேருந்துகளில் வெளியூர்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழகத்தின் தொலைதூர இடங்களுக்கு தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக நெல்லை, நாகர்கோவில், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குளிர்சாதன வசதி, படுக்கை, இருக்கை வசதி கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இந்தப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்னரே பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர், கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு செய்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) தொடங்கி நடைபெற்று வருகிறது.
http://www.tnstc.in, www.redbus.in, www.paytm.com ஆகிய இணையதளங்களில் அரசு பேருந்துகளுக்கு பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் இடங்கள், கூட்ட நெரிசலைக் குறைப்பது குறித்தும் போக்குவரத்துறை அதிகாரிகள் விரைவில் ஆலோசணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.