சென்னை: தொடர் மழையை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தொடர் பெய்து வரும் மழை காரணமாக பெரும்பான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாளை ஓரளவுதான் மழை இருக்கும் என்று மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சென்னை முழுவதும் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். மழையால் பாதிக்கப்படும் 4,399 இடங்களில் மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் இன்னும் போதிய அளவு மழை பெய்யவில்லை என்றார்.
மேலும், கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.