குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் சாலையில் நள்ளிரவில் மரங்கள், பாறைகள் விழுந்துள்ளதால் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்தது. சில பகுதியில் விரிசல் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலை பகுதிகளில் விழுந்துள்ள மரங்களை தீயணைப்பு துறையினர், பாறைகளை நெடுஞ்சாலை துறையினர் நள்ளிரவு முதல், மழையையும் பொருட்படுத்தாமல் அகற்றி வருகின்றனர்.
இதனிடையே, ராட்சத பாறையை அகற்ற முடியாததால், போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் மாற்று பாதையான கோத்தகிரி வழித்தடத்தில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டுள்ளது.