தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு வெளியேறிய பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து முகாமிட்டன. இன்று காலை யானைகள் வனத்திற்குள் செல்லாமல் விவசாய தோட்டத்துக்குள் சுற்றி திரிவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தாளவாடி மற்றும் ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் விவசாய தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் விவசாய விளை நிலங்களில் முகாமிட்டு இருப்பதால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.