கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த, மாநில பாஜக தலைவர்கள் குழு தில்லி சென்றுள்ளது.
கர்நாடக மாநில பாஜக தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவனி, மாதேசாமி ஆகியோர் நேற்றிரவு தில்லி சென்றனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
அப்போது முதல்வர் மற்றும் அமைச்சரவை பட்டியல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.