நடந்து முடிந்த 17-வது மக்களவைக்கான பொது தேர்தலுக்காக மொத்தமாக ரூ.60 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நடந்த முடிந்த தேர்தல்களிலேயே செலவுகள் மிகுந்த தேர்தலாக 17-வது மக்களவைக்கான தேர்தல் தான் என சிஎம்எஸ் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
17-வது மக்களவைக்கான இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தல் திருவிழாவில் 03 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தல் திருவிழாவுக்காக செலவிடப்பட்ட செலவுகள் குறித்த புள்ளி விவரங்கள் சிஎம்எஸ் என்ற தனியார் முன்னணி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக வாக்கு ஒன்று ரூ.700 வீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவைத் தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைக்கான தேர்தலுக்காக ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அப்படியே இரட்டிப்பாக ரூ.60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதனால் இந்திய தேர்தல்களே உலகிலேயே அதிக செலவில் நடத்தப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தமாக தேர்தலுக்காக செலவிடப்பட்ட ரூ.60 ஆயிரம் கோடியில், தேர்தல் ஆணையம் மட்டும் ரூ.10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை செலவிட்டுள்ளதாகவும், மொத்த செலவில் பாஜகவின் பங்கு மட்டும் 45 சதவீதம் எனவும், காங்கிரஸ் பங்கு 40 சதவீதம் என அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், வாக்காளர்களுக்கு நேரடியாக ரூ.12,000 -15,000 கோடியும், விளம்பரத்துக்காக ரூ.20,000 - 25,000 கோடியும், லாஜிஸ்டிக்ஸ் செலவுக்காக ரூ.5,000 - 6,000 கோடியும், இதர செலுவுகளுக்காக ரூ.10,000 - 12,000 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் திருவிழாவுக்காக மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்றும், செலவுகளை குறைக்கும் வழிவகைகளை ஆராயப்பட வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.