கோவை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செய்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவையில் ஏழு இடங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இந்தியாவில், பயங்கரவாத செயல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டதையும் அதிகாரிகள் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், கோவையைச் சேர்ந்த சிலர் இலங்கை குண்டுவெடிப்புக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதையும், அவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டதையும் அதிகாரிகள் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் இன்று கோவை உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய், பொன் விழா நகர் உள்ளிட்ட 7 இடங்களிலும், அசாரூதீன், சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோர் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் காலை 6 மணி முதல் நடத்தி வரும் அதிரடி சோதனையை அடுத்து அந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.