வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ஃபானி புயல், ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கடலோர மாவட்டங்களின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை (மே 3) கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ஃபானி புயல், ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை (மே 3) கரையைக் கடக்கிறது.
அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், நாளை வெள்ளிக்கிழமை (மே 3) பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிஸா அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிஸா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஃபானி புயல் காரணமாக, ஒடிஸாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹவுரா மற்றும் புரிக்கும் இடையே 43 ரயில்கள் சேவையை ரத்து செய்துள்ளது தென் கிழக்கு ரயில்வே. மே 2, 3 ஆம் தேதிகளில் 12 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து சென்னை, திருச்சி, யஸ்வந்த்பூர் வரும் ரயில்கள் சேவை மற்றும் ஹாரக்பூர் - விழுப்புரம் விரைவு ரயில், புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்திலும் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதியிலுள்ள கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய கடலோரப் பகுதிக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Cyclone Fani Over 43 Trains Cancelled To Keep Passengers Safe