திண்டிவனம் அருகே ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் உடல் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் ராஜி. இவர் அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ளார். இவர் மனைவி லதா, மகன் கவுதமுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இந்திரத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜி, மனைவி லதா, மகன் கவுதம் ஆகிய 3 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
தூக்கத்தில் இருந்ததால் மின்கசிவு ஏற்பட்டு ஏசியில் தீவிபத்து ஏற்பட்டது தெரியாமல் தூக்கத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். தந்தை, தாய் மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.