சென்னை: நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், 13 வாக்குச் சாவடிகளுக்கான மறுவாக்குப் பதிவு ஏற்பாடுகள் குறித்து 10 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுடன், 13 வாக்குச் சாவடிகளுக்கான மறு வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து 10 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் செய்யப்பட்டுள்ள வசதிகள், வாக்குப்பதிவுக்குத் தேவையான தளவாடப் பொருள்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுதல், வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி கண்காணித்தல் ஆகியன குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் ஆணையம் தொடர்பான செயலிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் அளிக்கப்பட்டன.
வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக பணம் எடுத்துச் செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குதல் ஆகியவற்றைக் கண்காணித்து தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் எம்.பாலாஜி, ராஜாராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.