கரூர்: கரூர் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளரின் காரில் ரூ.2 லட்சம் பணம் சிக்கியது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நொய்யல் சோதனைச்சாவடியில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகக் கண்காணிப்பாளர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த, கரூர் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளரும், கரூர் மாவட்ட அமமுக செயலருமான பி.எஸ்.என். தங்கவேல் ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கான உதவி தேர்தல் அலுவலர் அமுதாவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பி.எஸ்.என். தங்கவேல் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.