தண்டேவாடா: சத்தீஸ்கர் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி, 4 காவலர்கள் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடைய நக்ஸலைட் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், தண்டோவா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா கூறியதாவது:
தண்டேவாடா சிறை அருகே ஜீவன் (எ) ஹெம்லா என்ற பயங்கரவாதியை போலீஸார் கைது செய்தனர். ஜீவன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று கூறி காவல் துறை அவரை தேடி வந்தது.
தண்டேவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக நக்ஸலை சந்திக்க நக்ஸல் பயங்கரவாதிகள் வரவுள்ளதாக சுக்மா மாவட்ட காவல்துறை தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவரை கைது செய்தனர். அவருடன் இருந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
ஜீவன், பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி, காவலர்கள் 4 பேர் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று அபிஷேக் பல்லவா தெரிவித்தார்.