சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடை ரத்து

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில்,  கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடை ரத்து

புது தில்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில்,  கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற ராஜீவ் குமாருக்கு உச்சநீதிமன்றம் 7 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியது. 
இதுதொடர்பாக  ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன் அவரை விசாரிக்க அனுமதி மறுத்தனர். சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், மேற்கு வங்க அரசு அவருக்கு உதவி வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. 

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ  விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறும் ராஜீவ் குமார் உள்ளிட்ட மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அத்துடன் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி  உத்தரவிட்டது.

அதையடுத்து இந்த வழக்கில் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிபிஐ மனு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, சிபிஐ தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், "நிதி நிறுவன மோசடி வழக்கில் சேகரித்த தகவல்களை பல முறை கோரியும் ராஜீவ் குமார் அளிக்கவில்லை. அவருக்கு அளித்துள்ள இடைக்கால பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

அதையேற்ற நீதிபதிகள், ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை ரத்து செய்தனர். மேலும், இந்த வழக்கில் 7 நாள்களுக்கு பிறகு ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்து விசாரிக்கலாம்; அந்த 7 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளுமாறு ராஜீவ் குமாரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றதையடுத்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெறும் பணியில் ராஜீவ் குமார் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com