சென்னை: சூரியனின் வெளிப்பரப்பை ஆராய 2020-ஆம் ஆண்டு "மிஷன் ஆதித்யா' திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக இஸ்ரோ சார்பில் "யுவிகா 2019' என்ற பெயரில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து அறிவியல் திறனறிவு, கண்டுபிடிப்புகள் உள்பட பல்வேறு தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு 108 மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து ஜே.கே. ஆதித்யா, ஆர். நித்யாராஜ், பி.சமீரா ஆகியோரும், புதுச்சேரியிலிருந்து எம்.பவித்ரா, கே.கவிபாரதி, ஜி.மோனிகா ஆகியோரும் இளம் விஞ்ஞானி திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் "யுவிகா 2019' திட்டத்தின் கீழ் பயிற்சி பெறவுள்ள 108 மாணவ, மாணவிகளுடன் இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார். அப்போது நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவர்கள் இஸ்ரோ தலைவர் சிவனிடம், இந்திய விண்வெளித்துறை, கோள்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு, புவிப் பாதுகாப்பு, விண்வெளி, பொருளாதாரம் தொடர்பான பல கேள்விகளை எழுப்பினர். மாணவர்களின் வினாக்களுக்கு சிவன் விரிவாக பதிலளித்தார்.
அப்போது, 2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராய்வதற்கான "மிஷன் ஆதித்யா' திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ உத்தேசித்திருப்பதாக சிவன் குறிப்பிட்டார்.
"யுவிகா' திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், ஆமதாபாதில் உள்ள விண்வெளி செயலாக்க மையம், ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி செயலாக்க மையம் ஆகிய நான்கு மையங்களில் இரண்டு வார காலத்திற்கு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.