புதுச்சேரி: புதுவை அரசின் கோப்புகள் எதுவும் ஆளுநர் மாளிகைக்கு வருவதில்லை என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி குற்றஞ்சாட்டினார்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. கிரண் பேடியின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமி நாராயணன் தொடுத்த வழக்கில், புதுவை யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. இதுதொடர்பாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்தும், இதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை ஒத்திவைப்பதாக கூறியது.
இந்த நிலையில், அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் கிரண் பேடி செயல்பட்டு வருகிறார் என்றும், இதனால், அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும் முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.
இதேபோல, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும். அதை மீறிச் செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்று தலைமைச் செயலர் உள்ளிட்ட அனைத்துத் துறைச் செயலர்களுக்கும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் எம்எல்ஏ கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தை தனது கட்செவி அஞ்சல் மூலம் பகிர்ந்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, "அரசு நிர்வாகம் என்பது மக்களுக்கானது. கடந்த சில நாள்களாக அரசின் எந்த ஒரு கோப்பும் ஆளுநர் மாளிகைக்கு வருவதில்லை. புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாகி என்ற முறையில் இதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. யூனியன் பிரதேசத்தின் சட்ட விதிகள், வணிக, நிதி விதிகளில் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை' எனப் பதிவிட்டுள்ளார்.