பெலம்: பிரேசில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பிரேசில் வடமாநிலமான பாராவில் உள்ள பெலம் நகரில் உள்ள மதுபான விடுதியில் நேற்று மாலை அதிகமானோர் மது குடித்துக்கொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கார்களில் வந்த 7 பேர் விடுதிக்குள் புகுந்து தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், மதுபான விடுதியில் இருந்த 6 பெண்கள், 5 ஆண்கள் என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் தலையிலேயே குண்டு பாய்ந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு பயங்கவாத தாக்குதலா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.