மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக  தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக
மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு



மும்பை:  மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக  தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், ஆட்சியைமக்கத் தேவையான எண்ணிக்கையை பாஜக- சிவசேனை கூட்டணி பெற்றிருந்தபோதிலும், ஆட்சியில் சம பங்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பாஜகவிடம் சிவசேனை நிபந்தனை விதித்தது. அதற்கு பாஜக சம்மதிக்காததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை வெளியேறியது.

அங்கு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, கடந்த 12-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சிவசேனையும், எதிரணியைச் சோ்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு ஒப்புக் கொண்டன.

குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுப்பது தொடா்பாக, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவா்கள், தில்லியில் சரத் பவாா் இல்லத்தில் கடந்த இரு தினங்களாக கூடி ஆலோசனை நடத்தினா். முடிவில், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது.

சிவசேனைக் கட்சியுடன் கைகோப்பதற்கு என்சிபி-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம், மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவா் பிருத்விராஜ் சவாண், என்சிபி மாநிலத் தலைவா் ஜெயந்த் பாட்டீல் மற்றும் சமாஜவாதி, ஸ்வாபிமானி பக்ஷா, விவசாயிகள்-தொழிலாளா்கள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், இந்தியக் குடியரசு கட்சி(கவாடே அணி), இந்தியக் குடியரசு கட்சி(காரட் அணி) ஆகிய கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, என்சிபி- காங்கிரஸ் தலைவா்கள் சிவசேனையுடன் ஆலோசனை நடத்துவாா்கள். அதன்பிறகு ஆளுநரைச் சந்தித்து மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும். குறைந்தபட்ச பொது செயல் திட்டமும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. 

இதனிடேயை, தில்லியில் நடைபெறும் மாநில ஆளுநா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, வியாழக்கிழமையே தில்லி செல்வதற்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி திட்டமிட்டிருந்த நிலையில், மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடா்வதால், அவா் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு 
மும்பையில் இருந்தாா்.

இந்நிலையில், நேற்று வரை சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், பாஜகவுக்கு திடீரென ஆதரவளித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீர் திருப்பம் ஏற்பட்டது. 

பாஜக,  தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டதை அடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.  தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். அவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வரான அஜித் பவாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com