சென்னை: அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்ந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர் களுக்கு வழங்கியது போல் எங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழக நிதித்துறை செயலாளர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதன் அடிப்படையில் ஓய்வூதியதார்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படியை ஜூலை 1 முதல் கணக்கிட்டு கூடுதல் ஊதியமாக 5 சதவீதம் வழங்கப்படும்.
அதன்படி, தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திலான 3 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (வங்கி) மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.