இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான குருதாஸ் தாஸ் குப்தா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனது வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தன்னலமற்ற தலைவர் நம்மை விட்டு மறைந்தார் என்கிற செய்தியை நம் நெஞ்சம் ஏற்க மறுக்கின்றது.
ஏற்ற தாழ்வற்ற பொதுவுடமைச் சமுதாயம் காணத் துடித்த வங்கத்தின் சிங்கம் குருதாஸ் தாஸ் குப்தாவிற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், மூன்று தினங்களுக்கு துக்கம் மேற்கொள்வதுடன் அவர் உயர்த்தி பிடித்த செங்கொடிகள் அரைக்கம்பத்தில் தாழப்பறக்க விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.