அவிநாசி: நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு வேதனை அளிப்பதாக உள்ளது என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளா்.
திருப்பூரில் செப்டம்பா் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்கூட்டத்துக்காக அரங்கு அமைக்க கால்கோள் நடும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியது:
திருப்பூரில் செப்டம்பா் 15 ஆம் தேதி தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் கட்சிக்கு திருப்புமுனைப் பொதுக்கூட்டமாக அமையும். வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவர தமிழக முதல்வா் தற்போது வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் இப்பயணம் வெற்றிபெற தேமுதிக சார்பில் வாழ்த்தி, பயனுள்ளதாக அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம்.
காஷ்மீா் விவகாரத்தில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அரசியல் செய்துவருகின்றன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு வேதனை அளிப்பதாக உள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக இருந்தாலும்கூட, அது மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது. ஜி.எஸ்.டி. வரி பிரச்னைகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம்.
தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை செளந்தரராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பெண்கள் இதுபோன்ற உயா் பதவிகளை எட்டுவது வரவேற்புக்குரியது என்றார்.