சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான செல்போன்களை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய சியோமி நிறுவனத்தின் துணை தலைவர் மனு குமார் ஜெய்ன், சியோமி நிறுவனத்திற்கு முன்பாக பல்வேறு நிறுவனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் சியோமியின் சாதனையை யாரும் நெருங்கவில்லை என்றும் லட்சக் கணக்கான ரசிகர்களின் அன்பினால் மட்டுமே இது சாத்தியமானதாகவும் தெரிவித்தர்.
மேலும் தங்களது இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய நங்கள் தொடர்ந்து உழைப்போம் என்றும் மனு குமார் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு முதல் ஜூலை 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் இந்த மைல்கல்லை சியோமி நிறுவனம் அடைந்துள்ளதாக சர்வதேச தரவுக் கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ரெட்மீ a மற்றும் ரெட்மீ நோட் என்ற இரண்டு மாடல் செல்போன்கள் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
சர்வதேச தரவுக் கழகத்தின் அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 28.3 சதவீத சந்தைப் பங்குகளைக் கொண்டு, சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு காலாண்டுகளில் இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.