நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் தருணத்திற்காக 130 கோடி மக்களும் ஆர்வமுடன் காத்திருக்கிறனர் என்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி நீள்வட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவின் நீள்வட்டப் பாதைக்குச் சென்று சுற்றி வருகிறது. இந்த நிலையில், விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர்.
அதன் மூலம், விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதி பிரிக்கப்பட்ட இடத்தில் இருந்தபடியே, நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் அருகில் சுற்றி வரும் நிலையில் நாளை சனிக்கிழமை அதிகாலை (செப் 7) 1.30 மணிக்கு வேறு யாரும் சென்றிராத நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது. இதற்காக லேண்டரை தரையிறங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்க பதிவில், "சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் இன்னும் சில மணிநேரங்களில் தரையிறங்க உள்ளது. அந்த முக்கியமான தருணத்தை காண்பதற்காக, நாட்டின் 130 கோடி மக்களும் காத்திருக்கின்றனர். அதே போன்று மற்ற உலக நாடுகளும் நமது விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனையை மீண்டுமொரு முறை பார்ப்பதற்கு ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்திய விண்வெளி வரலாற்றில் நடக்கவிருக்கும் அந்த முக்கியமான தருணத்தை பார்ப்பதற்காக, பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு செல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோன்று மற்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்களும் இந்த சிறப்பான தருணத்தை காண்பதற்காக என்னுடன் இணைகின்றனர். பூட்டானில் இருந்தும் இளைஞர்கள் சிலர் இதற்காக இங்கு வந்துள்ளனர்.
எனவே, சந்திராயன்-2 நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் நிகழ்வை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுங்கள். அதனை நான் ரீட்வீட் செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.