சென்னை: தனது அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இஸ்ரேல் செல்ல உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) அதிகாலை சென்னை திரும்பினார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபை நாடுகளுக்கு அரசு முறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை 13 நாள்கள் சுற்றுப்பயணத்தை முதல்வர் மேற்கொண்டார்.
தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளையும் ஈர்த்து, பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் சென்னை திரும்பினார்.
அவருக்கு அமைச்சர்கள் அவரை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், துரைகண்ணு ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன் மற்றும் எம்ல்ஏக்கள், எம்பிக்கள் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். இதேபோல் விமான நிலையில் ஏராளமான அதிமுகவினர் திரண்டு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், இங்கிலாந்து, அமெரிக்கா, துபை போன்று தமிழத்தை மேம்படுத்தவே வெளிநாடு சென்றேன். வெளிநாட்டில் சென்ற இடங்களில் எல்லாம் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, துபை நாடுகள் சுற்று பயணத்தில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.8,835 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 35 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சேலத்தில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்றார்.
வெளிநாட்டவர்களை அவர்களின் உடையில் சென்று சந்தித்தால்தான் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதால் கோட் சூட் அணிந்தேன். தமிழக முதல்வர்கள் வெளிநாடு செல்லாத நிலையை தற்போது நான் போக்கியுள்ளேன். குறுகிய காலத்தில் தொழில் முதலீடுகள் வந்து சேரும் என்றார்.
மேலும், எதிர்காலத்திலும் வெளிநாட்டு பயணங்கள் தொடரும். நீர்மேலாண்மைக்காக அடுத்ததாக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.