திருச்சி: திருச்சி மாநகரில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதோடு, பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், விழிப்புணர்வு பதாகைகள், ஒலிப்பெருக்கி பிரசாரம், காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் என பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், பெரும்பாலானோர் ஊரடங்கை மதித்து வீட்டிலிருந்தாலும், சிலர் அவசியமற்று வெளியில் சுற்றித்திரிவது வாடிக்கையாக உள்ளது.இதனை முற்றிலும் தடுப்பதற்கும், வெளியில் சுற்றித்திரிவோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, கரோனா தொற்று நோய் தடுப்பு, மீட்பு பணிகளுக்காக உதவிஆய்வாளர், 40 காவல்ஆளினர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர்.
திருச்சி மாநகர காவல்துறையினருடன் சேர்ந்து, கோட்டை, காந்தி மரா்க்கெட், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கவும், சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தி, வாகனஓட்டிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இரண்டாவது நாளாக சனிக்கிழமை திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ராஜகோபுரம், திருவரங்கம் பேருந்துநிலையம், சத்திரம் பேருந்துநிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வாகனை ஓட்டிகளை வழிமறித்து கரோனா தொற்று அபாயம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுதல் குறித்து ஆலோசனைகளும் வழங்குகின்றனர்.