ஜம்மு காஷ்மீர்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் மீது பிஎஸ்ஏ கீழ் வழக்குப் பதிவு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, அலி முகமது சாகர், சர்தாஜ் மதானி, ஹிலால் லோன் மற்றும் நயீம் அக்தர் ஆகிய தலைவர்களின் பட்டியலில் ஷா பைசலும் சேர்ந்துள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஷா பைசல், 2010 ஆம் ஆண்டில் நடந்த குடிமையியல் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தவர். தற்போது அவர் பணியை ராஜிநாமா செய்து விட்டு ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியை தொடங்கி அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
காஷ்மீரில் அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவது இன்னமும் நிறுத்தப்படவில்லை. அரசியல் மூலமே ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மாநிலத்தில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் காஷ்மீரில் அமைதியை கொண்டு வர முடியாது. அரசியல் மூலமே உறுதியான தீர்வை ஏற்படுத்த முடியும் என்று கூறியிருந்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த பைசல், மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த வித விசாரணையும் இன்றி ஒருவரை இரண்டு ஆண்டுகள் வரை, சிறையில் அடைக்க முடியும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவு, இஸ்தான்புல் செல்ல விருந்த பைசல், தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை கைது செய்து ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.