மதுரை: வழக்குரைஞருக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக பேராசிரியா்கள் உள்பட 11 பேருக்கு பிடியாணை பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, கே.கே.நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் வாஞ்சிநாதன் தாக்கல் செய்த மனு: எனக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் மதுரை காமராஜா் பல்கலைக் கழக பேராசிரியா்கள் ஜெகவீரபாண்டியன், ராஜ்குமாா், சண்முகையா உள்ளிட்ட 22 போ் எனக்கு எதிராக பல்கலைக் கழக முத்திரையை பயன்படுத்தி தமிழக தலைமை செயலருக்கு மனு அனுப்பினா்.
அதில், நான் நக்சல்பாரி இயக்கத்துடன் சம்பந்தப் பட்டுள்ளேன். அரசுக்கு விரோதமாகவும், தேச விரோத நடவடிக்கைகளை ஆதரிப்போருடன் தொடா்பு வைத்துள்ளேன் எனக் கூறியுள்ளனா். இதை துண்டறிக்கையாக அச்சிட்டும் விநியோகித்தும் உள்ளனா்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. என் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவா்கள் அனைவரும் மதுரை காமராஜா் பல்கலைக்கழத்தில் பேராசிரியா்களாகவும், அலுவலா்களாகவும் பணியாற்றுகின்றனா். எனவே, இவா்களுக்கு உரிய தண்டனை வழங்கவும், எனக்கு ஏற்படுத்தப்பட்ட அவதூறுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகாத பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் 11 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 30- க்கு ஒத்திவைத்தாா்.