புதுதில்லி: நாட்டில் இதுவரை 92 லட்சத்து 97 ஆயிரத்து 749 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,41,576 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. 379 பேர் பலியாகி உள்ளதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது. 2,27,439 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,79,892 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், ஜூலை 2 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் 92,97,749 க்கும் அதிகமான கரோனா தொற்று சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,41,576 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
சோதனைத் திறனை அதிகரிக்கும் முயற்சியாக, அரசு பொது ஆய்வகங்கள் (730) மற்றும் தனியார் ஆய்வகங்கள் (270) என மொத்தம் 1,000 கரோனா சோதனை ஆய்வகங்களுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.