புது தில்லி: மணிப்பூரில் மாபெரும் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 23) அடிக்கல் நாட்ட உள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம், மணிப்பூரின் கிரேட்டர் இம்பால் திட்டப் பகுதியில் எஞ்சியிருக்கும் குடியிருப்புகளுக்கும், மொத்தமுள்ள 16 மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 2,80,756 வீடுகளுக்கும் குழாய் மூலமாக தூய்மையான குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
"2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்தின் இலக்கை எட்டுவதற்கு இந்த குடிநீர் விநியோகத் திட்டம் உதவும்' என்று பிரதமர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் சுமார் ரூ. 3,054.58 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு தில்லியில் இருந்தபடி காணொலி வழியில் பிரதமர் மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்ட உள்ளார்.