புதுக்கோட்டை நகரப்பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6.4 டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை புதன்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸார், இப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக 4 பேரையும் கைது செய்தனர்.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகரப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதன்விளைவாக புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 6390 கிலோ (6.4 டன்) எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை இரவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த முகமது அலி, வீரமணி, நாராயணன், சௌந்தர்ராஜன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஆம்னி கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல் அதிகாரிகளை காவல் கண்காணிப்பாளர் பெ. வே. அருண்ஷக்திகுமார், சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டினார்.
கைது செய்யப்பட்டோர் வியாழக்கிழமை காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்படவுள்ளனர்.