சீர்காழி: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க திட்டமிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவுரைப்படி லைசால், பினாயில் மற்றும் பிளீச்சிங் பவுடர் கலந்த 10 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினியை சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வாகனம் மூலம் எடுத்துச் சென்று பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள வீடுகள் கடைகள் திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் வாசல்களில் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் மற்றும் பேரூராட்சி சுகாதார பிரிவினர் தெளித்தனர்.