தெலங்கானாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது

ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக வந்த 23 வயது இளைஞர், வழியில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உயிரிழந்தார்.
தெலங்கானாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது


நாமக்கல்: ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக வந்த 23 வயது இளைஞர், வழியில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

கரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு படிக்கச் சென்ற மாணவ மாணவிகள் பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் தன்னம்பிக்கையுடன் தங்கள் சொந்த ஊருக்கு எப்படியும் சென்று விடுவோம் என முயற்சி செய்து வருகின்றனர். 

இதுபோல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பணிக்குச் சென்ற பொறியியல் பட்டதாரியான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் லோகேஷ் என்பவர் தன்னுடன் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களுடன் வாகனங்கள் ஏதும் இல்லாததால் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நாக்பூரில் இருந்து நடந்தே வந்துள்ளனர். வழி போக்கில் கிடைத்த லாரி ஓட்டுநர் உதவியுடன் லாரியில் ஏறி வந்த இளைஞர்கள் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்துள்ளனர். அங்கு வாகனச் சோதனையில் சிக்கிய இவர்கள் உடனடியாக செகந்திராபாத் பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி இரவு முகாமில் இருந்தவர்களை மருத்துவத் துறையினர் பரிசோதித்தபோது திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக இளைஞர் லோகேஷ் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

 இதனையடுத்து  தமிழக அரசுக்கும் லோகேஷின் குடும்பத்தினருக்கும் செகந்திராபாத் வருவாய்த்துறையினர் தகவல் அளித்ததன் பேரில்  பரிதவித்த லோகேஷ் குடும்பத்தினர்  மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதின் பேரில்  உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் தீவிர முயற்சியின் அடிப்படையில் லோகேஷின் உடல் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com