நாளை ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமுடக்கம் காரணமாக காவிரி ஆறு படித்துறைகளுக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய் பரவலைத் தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு 12 மணி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளின்றி பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ளது. ஆகையால் பொதுமுடக்கம் காரணமாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்குவாசல் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை படித்துறை ஆகியவை மூடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் புதுமணத் தம்பதிகள் யாரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட நீர்நிலைகளுக்கு வரவேண்டாம். பொது முடக்கத்தை பொதுமக்கள் கடைப்பிடித்து மாநகர காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.